சனசமூக நிலைய வரலாறு

எமது நிலையமானது 1979ம் ஆண்டு சோளங்கன் கிராமத்தின் மத்தியில் கிராம வளர்ச்சிக்காக எமது பெரியோர்களால் தோற்றுவிக்கப்பட்டது. அதாவது சோளங்கன் ஸ்ரீதேவி மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.


தொடர்ந்து எமது பெரியோர்களால் எமது நிலையத்தில் பத்திரிகை, அறிவுசார் புத்தகங்கள் உள்ளடங்கி இயங்க ஆரம்பித்தது. இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில் கரணவாய் மேற்கில் எல்லோரும் விரும்பும் நிலையமாகவும், அதிக வாசகர்களைக் கொண்ட நிலையமாகவும், தனக்கே உரித்தான நிலத்தில் கட்டிடத்தை கொண்டதாவும் மிளிர்ந்தது.

இவ்வாறு இயங்கி வரும் வேளையில் எமது பெரியோர்களின் ஆர்வத்தால் கர்ப்பிணித் தாய்மாருக்கான மருத்துவபீடமானது சோளங்கன் சனசமூக நிலையத்தில் கரணவாய் மேற்குக்கே பொதுவாக அமைந்தது. அதுமட்டுமன்றி விளையாட்டுக்கள், கல்வியிலும் கிராமமக்களை முன்னேற்றுவதற்கான நடவடிக்கையும் எமது நிலையத்தால் மேற்கொள்ளப்பட்டது.

இதன் விளைவாக சோளங்கன் முன்பள்ளி எனும் பெயரில் பாலர் பிள்ளைகளுக்கு கல்வி புகட்டினர். இதனூடாக எமது கிராமத்தில் விளையாட்டுப்போட்டிகள், நிகழ்வுகளையும் செய்யத்தவறவில்லை. இவ்வாறு தொடர்ந்து வளர்ச்சிப்படியில் சென்றுகொண்டிருக்கும் சனசமூக நிலையமானது நாட்டில் ஏற்பட்ட அசாதரண சூழ்நிலையால் சீர்குழைந்தது.

இதனால் எமது நிலையத்தில் தனது நடவடிக்கைகளை சீராக நடத்த முடியவில்லை. அதாவது முன்பள்ளி, விளையாட்டுக்கழகம் போன்றவற்றையும், ஏனைய நடவடிக்கைகளையும் செயற்படுத்த முடியவில்லை. எனினும் பத்திரிகை போடுதல், மருத்துவபீடம் என்பவற்றை தொடர்ந்து நடாத்தினர். இவ்வாறு எமது பெரியோர்களின் நிர்வாகத்தில் இயங்கி வந்த சனசமூக நிலையமானது 12.05.2008 அன்று இலங்கை வங்கியால் அங்கிகரிக்கப்பட்ட சனசமூக நிலையமாக தேர்வு செய்யப்பட்டு முதலாவது இலங்கை வங்கி கிராமமாக மிளிர்ந்தது.

ஆனாலும் அபிவிருத்தியை கொண்டு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இவ்வாறு இருக்கும் வேளையில் சோளங்கன் இளைஞர்களின் ஒத்துழைப்புடன் நாட்டின் அசாதரண சூழ்நிலையால் பதியப்படாத விளையாட்டுக்கழகம் கிருஷ்ணதாஸ் பத்மரூபனின் அதீத ஆர்வத்தால் கரவெட்டி பிரதேச செயலகத்தின் கீழ் 2009.07.11 ஆம் திகதி சோளங்கன் விளையாட்டுக்கழகம் என்ற பெயரில் பதிவு செய்து தோற்றம் பெற்றது. அதுமட்டுமன்றி இலங்கை இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் கீழும் பதிவு பெற்று மிகவும் சிறப்பாக இயங்க ஆரம்பித்தது.

இதனைப்பார்த்த எமது பெரியோர்கள் சோளங்கன் சனசமூக நிலைய நிர்வாகப் பொறுப்பை சோளங்கன் இளைஞர்களிடமே 2009.12.20 ஆம் திகதி ஒப்படைத்தனர். பொறுப்பை ஏற்ற இளைஞர்கள் 2010ஆம் ஆண்டிலிருந்து (சனசமூக நிலையம் ஆரம்மிக்கப்பட்டு 31வது வருடத்திலிருந்து) சனசமூக வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டனர்.

இதன் காரணமாக சனசமூக நிலைய அடிப்படை வசதிகள் மேல் எழுந்தன. அதுமட்டுமன்றி 03.01.2011ம் ஆண்டு இயங்காமல் இருந்த முன்பள்ளியை மீளவும் இயங்கச் செய்து அதன் தொடர் நடவடிக்கைக்கும் உழைத்தனர். இதனால் 26.06.2011ம் ஆண்டு சோளங்கன் சனசமூக நிலையத்தின் கிழக்குப் பக்கத்தில் பத்திரிகை வாசிப்பதற்கென புதிதாக ஓரிடமும், கர்ப்பிணித்தாய்மாருக்கான ஓர் அறையும் புனர் நிர்மானம் செய்யப்பட்டது. தொடர்ந்து 2012ம் ஆண்டு 18.01.2012 முன்பள்ளிக்கான சிறுவர் பூங்காவும் அமைக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாது நிலையத்திற்கென கொடி, சின்னம், மகுட வாசகம் என்பனவும் உருவாக்கப்பட்டன. மேலும் எமது சனசமூக நிலையம் அழகாக மாற்றப்பட்டு கணணியறை உட்பட எமது கலாச்சார முறைப்படி 03.10.2012 ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது. தற்போது மிகவும் எழில் மிக்க நிலையமாக எமது கிராமத்தில் காட்சியளிக்கின்றது.


தற்போது எமது நிலையத்தில் முன்பள்ளி, விளையாட்டுக்கழகம், கர்ப்பிணித்தாய்மாருக்கான மருத்துவபீடம், முதியவர்களுக்கான ஆயுள்வேதம், பத்திரிகை என அனைத்து செயற்பாடுகளும் செயற்படுத்தப்படுகின்றன. எனவே எமது பெரியோர்களின் உழைப்பினால் தோன்றிய சனசமூக நிலையத்தை மேலும் வளர்ச்சியடையச் செய்வது எமது கடமையாகும். ஆகவே எமது கிராமத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் எமது சனசமூக நிலையத்தை தொடர் அபிவிருத்திக்கு இட்டுச்செல்வதற்கு சோளங்கன் கிராம மக்கள், அங்கத்தவர்கள், உறுப்பினர்கள் அனைவரும் எம்மோடு இணைந்து பங்களிப்பு வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.


இந்த இணையத்தளத்தின் ஊடாக சோளங்கன் சனசமூக நிலைய விபரங்கள், நிகழ்ச்சிகள் என்பவற்றையும், எமது ஆலயங்களான அருள்மிகு சோளங்கன் ஸ்ரீதேவி மதுரை மீனாட்சியம்மன், கப்பூது நுணுப்பாவளை கந்தன் என்பவற்றின் விபரங்கள், நிகழ்ச்சிகள் என்பவற்றையும், ஏனைய எமது கிராம பொது விடயங்களையும் காணலாம் என்பதனை பெரும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

......நன்றி......
     யாதும் ஊரே யாவரும் கேளீர்


நீங்கள் சோளங்கனில் வசிப்பவரா/விரும்புபவரா?